29 April 2010

ஐஎஸ்பிஎன்


                  ISBN (ஐஎஸ்பிஎன்) என்கிற எழுத்துக்களையும் அதற்கான எண்களையும் பல மேல்நாட்டுப் புத்தகங்களில் பார்த்திருப்பீர்கள். INTERNATIONAL STANDARD BOOK NUMBER (சர்வதேச நிலையான புத்தக எண்) உலகில் உள்ள அத்தனை புத்தகங்களையும் பட்டியலிடவும், கணிப்பொறியாக்கம் செய்யவும் ஏற்பட்ட எண் இது. 


              அது போல யுபிஸி என்று ஒன்று உண்டு. யுனிவர்ஸல் ப்ராடக்ட் கோட். இதை வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான சரக்குப் பொருட்களின் மேல் பார்த்திருப்பீர்கள். பட்டை பட்டையாக கறுப்பு வெள்ளைக் கோடுகள்.  இது பதினோரு இலக்க எண்ணிக்கை. கறுப்புக்கோடு 0, வெள்ளைக்கோடு 1 என்று சம்பிரதாயம். இரண்டு அல்லது மூன்று பூஜ்ஜியம் சேர்ந்தால் பட்டை தடித்ததாகும். முதல் இலக்கம் பொருளின் வகை, அடுத்த ஐந்து இலக்கங்கள் தயாரிப்பாளர் யார், அடுத்த ஐந்து நிறம், எடை, அளவு போன்ற விவரங்கள். இதில் இல்லாதது ஒன்றே ஒன்று விலை!

             இப்போது எல்லா சூப்பர்மார்கட்டுகளிலும் இந்தப் பட்டைக் கோட்டை ஓர் ஒளிப்பேனாவால் வருடினால் போதும். கணிணி அதைப்படித்து என்ன பொருள், என்ன விலை என்று கண்டுபிடித்து பில் போட்டுவிடும்.




டைவர்ஸ்
உன்னை அவனும்
அவனை நீயும்
முழுமையாக
புரிந்து கொண்டபோது!

28 April 2010

அவளுக்கு ஓர் ஆடை - சில்க் ஸ்மிதா


வாலிப வசந்தங்களின்
திருவிழா தேவதையே!
செப்பனிடப்படாத சொப்பனமே!


மர்மம் சூழ்ந்த உன்
மரண வாசலில்
உனக்கு
மலர் தூவுகிறது!


வறுமையின் கோரப் பிடியிலும்
ஒழுங்காக உன்னால்
உடுத்திக்கொள்ள முடியவில்லை!
வசதியின் வாழ்க்கைப் படியிலும்
ஒழுங்காக உன்னால்
உடுத்திக்கொள்ள முடியவில்லை!



அணிந்து மகிழ்வதற்காகவே ஆடைகள்...
உன் ஆடைகளின் கதையோ
சோகமானது...
அவை அவிழ்ப்பதற்காகவே...
அணிவிக்கப்பட்டவை...


'நடிகை' என்று உன்னை
நாடு அழைத்தது!
எங்கள் முன்
ஒரு கேள்வியை
எறிந்தது உன் வாழ்க்கை!
'நடிக்காதவர்' யார்?


நீ தாலி கட்டாமல்
வாழ்ந்தது கூட
தவறல்ல-ஒரு
வேலி கட்டி வாழ்ந்திருக்கக் கூடாதா?


-மு. மேத்தா.
(சில்க் ஸ்மிதா இறந்த போது)

படித்ததில் பிடித்தவை!

பெண்களை வெறும் உடம்பாக நோக்காமல், அவர்களுடைய வீட்டோடும், அவர்கள் பின்புலத்தோடும், அவர்கள் அறிவோடும், அவர்கள் குணாதிசியங்களோடும் சுவீகரித்து நினைத்துக்கொள்ள வேண்டும். பொய் சொல்லாத பெண்ணாகவும், புறங்கூறாத நேர்மையாளியாகவும் பெண் இருந்தால் பழகுங்கள். இல்லையெனில் நீ எனக்கு முக்கியமில்லை என்று அந்நியப்படுத்துங்கள். பெண் என்பவள் அறிவு. பெண் என்பவள் அன்பு, பெண் என்பவள் அக்கறை, பெண் என்பவள் ஆதரவு என்று நின்த்துக்கொண்டால் உடம்பு பற்றிய சிந்தனை உடனே உறைந்து போகும்.                                                                                                    --- பாலகுமாரன். 

எனக்குப் பிடித்த கவிதை


நிதானமாக குடிக்கத்

தெரியவில்லை.

அவசரப் படாமல்

‘அனுபவிக்கத்’ தெரியவில்லை.

வேண்டாம் என்பதைச்

சொல்லத்தெரியவில்லை.

சத்தம் போடாமல்

பேசத் தெரியவில்லை

அவசியத்துக்குக் கூடக்

கோபப்படத் தெரியவில்லை.

பயப்படாமல்

இரண்டாம் மனுஷியை

சிநேகிக்கத் தெரியவில்லை.

ஹரிக்கேன் லைட்டைப்

பொருத்தத் தெரியவில்லை.

அடைகிற குருவிகளைப்

பார்க்கத் தெரியவில்லை.

வாழ்வும் கவிதையும்

தெரியும் என்ற

வாய்ச் சவடாலில் மட்டும்

குறைச்சலே இல்லை.

- கல்யான்ஜியின் ‘முன்பின்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.


படித்ததில் பிடித்தவை !

‘உங்களை நிந்தித்தவரை பதிலுக்கு நிந்திக்க
புத்திசாலித்தனம் தேவையில்லை.
அமைதியாக இருக்கத்தான்
புத்திசாலித்தனம் தேவை’.



இரக்கம்

கதவைத் திறக்கும்போது
காதல் சந்நிதானத்தையே
பிடித்துவிடுகிறது.