10 January 2013

நீரிழிவு நோய் - சந்தேகங்களும் பதில்களும்


சர்க்கரை நோய் பாதிப்பு குறித்து வாசகர்களின் கேள்விகளுக்கு கோயமுத்தூர் டயபடீஸ் பவுண்டேசன் டாக்டர் சேகர் பதில் .


நான் சைவ உணவு சாப்பிடுபவன். எனக்கு கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதாக டாக்டர் கூறுகிறார். எப்படி? 

கொலஸ்ட்ரால்(கொழுப்பு) என்பது ரத்தத்தில் இருப்பதாகும். ஒல்லி அல்லது குண்டு என்பது உடலின் மேல் உள்ள கொழுப்பை பொறுத்தது.அசைவ உணவு சாப்பிட்டால் தான் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்பதில்லை. சைவ உணவுகளிலும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். பால், தயிர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொண்டாலும் அதிகரிக்கும். ஒரு நபர் தினமும் 300 மில்லி லிட்டர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பயன்படுத்தலாம். பயன்படுத்தும் எண்ணை அளவு தினமும் 30 மில்லி லிட்டராக இருக்கவேண்டும்.

கொழுப்பு 210 மில்லி கிராம் உள்ளது. தொடர்ந்து கொழுப்புக்கு மாத்திரை சாப்பிடவேண்டுமா?. எனக்கு பிடித்த பஜ்ஜியை சாப்பிடக்கூடாதா?

பதில்: மொத்த கொலஸ்ட்ரால் 210 கிராம் என்பது அதிகம். ஐந்து வகை கொழுப்பு சத்தை பரிசோதிக்கவேண்டும். மொத்த கொலஸ்ட்ரால் 200 மில்லி கிராமுக்கு கீழும், டிஜிஎல் கொழுப்பு சத்து 150 மில்லி கிராமுக்கு குறைவாகவும், எச்டில் எனப்படும் நல்ல கொழுப்பு 40 மில்லி கிராமுக்கு மேலும் இருக்கவேண்டும். இருதயநோய் உள்ளவர்கள், ரத்த குழாய் அடைப்பு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் கொலஸ்ட்ரால் மாத்திரை சாப்பிடவேண்டும். பஜ்ஜி சாப்பிட்டால் அதற்கு ஒரு மாத்திரை சாப்பிடவேண்டியிருக்கும்.

எனக்கு சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளது. என்றாவது ஒரு நாள் இனிப்பு சாப்பிடலாமா? 
இனிப்பு சாப்பிடக்கூடாது. இனிப்புக்கு சர்க்கரையை உயர்த்தும் திறன் அதிகம். தினமும் 3 இட்லி சாப்பிடுகிறோம். அது செரிமானமாகி ரத்தத்தில் கலப்பதற்கு தாமதமாகிறது. அதனால் பசி எடுப்பதற்கு தாமதமாகிறது. அதற்கு பதில் இனிப்பு சாப்பிட்டால் விரைவில் ரத்தத்தில் சர்க்கரையாக கலந்து விடுகிறது. 15 நிமிடத்தில் மீண்டும் பசி எடுக்கிறது. பிறகு வேறு ஏதாவது சாப்பிடவேண்டியிருக்கும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும். எனவே இனிப்பு சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.

சப்பாத்திக்கு பதில் கோதுமை தோசை சாப்பிடலாமா?
கோதுமை தோசை சீக்கிரம் ஜீரணமாகி சர்க்கரையை உடனே உயர்த்தி விடும். ஆனால் சப்பாத்தியை நாம் மென்று சாப்பிடுகிறோம். அதனால் சர்க்கரையை உடனடியாக உயர்த்தாது.

நாம் சாப்பிடும் உணவில் ஒரு மாதத்திற்கு எவ்வளவு எண்ணை இருக்கவேண்டும்?. சூரியகாந்தி எண்ணை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்றதா? 

எண்ணையில் எவ்வளவு கலோரி, கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் தன்மையை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். பாமாயில், நெய், தேங்காய் எண்ணை, டால்டா, வெண்ணை, நேரடியாக ரத்தத்தில் கலந்து கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். அதேசமயம் மற்ற எண்ணைகள் ஈரல் வழியாக சென்று கொழுப்பை அதிகரிக்கும். எனவே ஒரே எண்ணையை பயன்படுத்தாமல் நல்லெண்ணை, கடலை எண்ணை, கடுகு எண்ணை, தவிட்டு எண்ணை, மாற்றி, மாற்றி பயன்படுத்துவது நல்லது. ஒரு நபருக்கு ஒரு மாத்திற்கு அரை லிட்டர் தான் பயன்படுத்தவேண்டும்.

எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. என் மகள் இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். அவளுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு உள்ளதா? 

கர்ப்ப காலத்தில் சர்க்கரை உள்ளதா என்பதை கண்டறிய குளுக்கோஸ் தாங்கு திறன் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். எடை அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மாதம் ஒரு முறை சிகிச்சைக்கு செல்லும்போது வெறும் வயிற்றில் மற்றும் சாப்பிட்ட பின் சர்க்கரை அளவை பரிசோதிக்கவேண்டும்.

சாப்பிட்ட பின் கால் எரிச்சல் உள்ளது. இது சர்க்கரை நோயின் அறிகுறியா? 
பதில்: ஆம். இது சர்க்கரை நோயின் அறிகுறி தான். நரம்பு பாதிப்பு. சாப்பிட்ட பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது கால் எரிச்சல் உண்டாகலாம். உடனடியாக மருத்துவரை பார்த்து பரிசோதிப்பது நல்லது.

எனக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் சர்க்கரை நோய் வருமா? 
தினமும் மது குடித்தால் கணையம் பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் வரலாம். எப்போதாவது மது குடித்தால் சர்க்கரை நோய் வராது.

கோதுமை, ராகி சாப்பிடுவதால் சர்க்கரை குறையுமா?
அரிசி, ராகி, கோதுமை, கம்பு, சோளம், ரவை உள்ளிட்ட எல்லா தானியங்களிலும் மாவுச்சத்து அதிகம். அதிக மாவுச்சத்து உள்ள உணவு சாப்பிட்டால் சர்க்கரை அதிகமாகும். தானியங்களை தனியாக சாப்பிடும்போது சர்க்கரையை உயர்த்தும் திறன் அதிகம். பயறு, பருப்பு, காய்கறி, கீரையுடன் சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரை அதிகரிக்காது.

இருதய நோய் பைபாஸ் ஆபரேசன் செய்த நபர்களுக்கு ஏற்ற உணவு எது..? 

இருதய நோய் வர எண்ணெய் உணவு மட்டும் காரணம் அல்ல. மாவு சத்து மாரடைப்பை உண்டாக்க முக்கிய காரணம் என அமெரிக்க ஆய்வு கூறுகிறது. இட்லி, சாதம் அளவை குறைத்து, அதற்கு பதில் காய்கறி, பருப்பு, பழங்கள் சேர்த்து சாப்பிடலாம்.

இன்சுலின் பேனா மூலமாக போட்டுக்கொள்வது நல்லதா, சிரிஞ்சு மூலம் போட்டுக்கொள்வது நல்லதா

இன்சுலின் மருந்து ஒன்றுதான். பேனாவில் போடுவதால் செலவு அதிகம். பேனா ஊசியில் ஏற்கனவே 30/70 விகிதாசாரத்தில் இன்சுலின் கலக்கி வைக்கப்பட்டுள்ளது. இது, சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. சிரிஞ்சு மூலம் போட்டால் செலவு குறையும்.

சர்க்கரை மாத்திரைகளால் பின்விளைவு உண்டாகுமா

ஒரே வகையான சர்க்கரை மாத்திரையை மருத்துவர் ஆலோசனையின்றி தொடர்ந்து சாப்பிட்டால் பாதிப்பு உண்டாகலாம். சர்க்கரை அளவுக்கு ஏற்ப மருத்துவர் ஆலோசனை பெற்று மாத்திரை சாப்பிடுவது நல்லது.

சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளது, ஆனால் கால் எரிச்சல் குறையவில்லை. இது எதனால்...? 

எச்.பி.ஏ.1சி என்ற 3 மாத சராசரி சர்க்கரை பரிசோதனைதான் சிறந்தது. கால் எரிச்சல் அதிகம் இருந்தால் அது சர்க்கரை நோயின் அறிகுறி.

கால் வீக்கம் இருந்தால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தமா..? 
கால் வீக்கத்துக்கு பல காரணங்கள் உண்டு. இருதய நோய், கல்லீரல் பாதிப்பு, ரத்த ஓட்டம் பாதிப்பு ஆகியவற்றால் கால் வீக்கம் ஏற்படும். சில சர்க்கரை மற்றும் பிபி மாத்திரைகளாலும் கால் வீக்கம் ஏற்படும். சிறுநீரக பாதிப்பால் கால் வீக்கமா என்பதை மருத்துவ பரிசோதனை முடிவில்தான் கூற முடியும்.

மருந்து, மாத்திரை இல்லாமல் சர்க்கரை நோயை குணமாக்க முடியுமா
சிலருக்கு முடியும். இரண்டாம் வகை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, சர்க்கரை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கு, இன்சுலின் சுரப்பு சரியாக இருந்தும் சர்க்கரை உள்ளவர்களுக்கு, பின்விளைவு அறிகுறி இல்லாதவர்களுக்கு, மன உறுதி உள்ளவர்களுக்கு இது சாத்தியம்.

குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வருமா..? 
பரம்பரை காரணமாக குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவது இல்லை. அதிக கலோரியுள்ள நொறுக்கு தீனிகளை தினமும் அளவுக்கு அதிகமான சாப்பிடுவதுதான் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்பட ஒரு முக்கிய காரணம்.

வெஜிடபிள் நூடுல்ஸ் சாப்பிடலாமா
நூடுல்ஸ் மைதா மாவினால் தயாரிக்கப்படுகிறது. மைதா என்பது பாலிஷ் செய்யப்பட்ட தானியம். இது, சர்க்கரை நோயை அதிகப்படுத்தும். இதில், நார்சத்து இல்லை. புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புண்டு. இது, குழந்தைகளுக்கு ஏற்ற உணவு அல்ல.

டயபடீஸ் சாக்லெட், டயபடீஸ் பிஸ்கட் சாப்பிடலாமா?
செயற்கை இனிப்பூட்டிகள் அதிகம் உள்ளதால் உடல்நலனை பாதிக்கும். சாப்பிடக்கூடாது.

தகவல்கள்; தினகரன்.

நீரிழிவு நோய் குறித்த மேலதிக தகவல்களுக்கு முருகானந்தன் கிளினிக் என்ற இந்த தளத்திற்குச் சென்று பாருங்கள்.

No comments:

Post a Comment