14 October 2010

உடலின் வாதை


நீ என்னிடம் பேசும்
ஒரு நீண்ட வாக்கியத்தில்
திடீரென ஒரு சொல் மறைந்து
அதன் வெற்றிடத்தில் காற்று ஓலமிடுகிறது.

உன் சந்திப்புகளில்
சில முகங்களை
அதன் திட நிலை கலைத்து
மங்கிய நிழல்களாக்குகிறாய்.

உன் வழித்தடங்கள்
பற்றிப் பேசும்போது
ஒரு பாதையை மட்டும்
வரைபடத்திலிருந்து
சாதுர்யமாக நீக்குகிறாய்.

ஒவ்வொரு முறையும்
மூடப்பட்ட கைகளை
அப்படியொரு நம்பிக்கையுடன் பிரிக்கிறேன்
அதிலிருந்து கண்ணுக்குத் தெரியாத
ஏதோவொன்று பறந்து செல்கையில்
ஏதோவொன்று முறிந்து விழுகிறது

பாதி சொல்லப்பட்ட கதைகளின் வாதை
பாதி வெளிப்படுத்திய உண்மைகளின் வாதை
பாதியே வைக்கப்பட்ட நம்பிக்கயின் வாதை
பாதியே ஏற்க முடிந்த ஒரு நேசத்தின் வாதை

இவையெல்லாம்
உன் நோக்கங்களற்ற நாடகத்தில்
பாதி சிதைக்கப்பட்ட
ஓர் உடலின் வாதையாகின்றன.
-மனுஷ்யபுத்திரனின் பழைய கவிதை


எது ஒதுக்க முடியாத விஷயம்
உறவுகள், உறவுப்பிணக்குகள். உறவுச்சுகங்கள். ஏன்? மனிதன் கூடி வாழும் இயல்பினன். அவன் இயந்திரம் போல தான் மட்டுமே என்று வாழ முடிவதில்லை. அவனுக்கு எதிரியும் வேண்டும், இணைபவரும் வேண்டும். இணைபவர் எதிரியாதலும், எதிரியானவர் இணைதலும் நடப்பதுதான் உலகம்.
--பாலகுமாரன்.

4 comments:

  1. உண்மை! கவிதை நன்றாக உள்ளது!

    ReplyDelete
  2. வருகைக்கும், பாராட்டுதல்களுக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. கவிதை நன்றாகத்தான் இருக்கிறது. ஏன் சொந்தக் கவிதைகளை (புதுசாய்)வெளியிடமாட்டீர்களோ!?

    ReplyDelete
  4. கருத்துக்கு நன்றி தோழி! புதுசா யோசிக்க நேரம் இல்லீங்க! இனி எழுத முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete