11 April 2011

வருகிறது இன்னொரு தேர்தல்




தமிழா!
முகவரியைப் பெறுவதற்கே முகம் தொலைந்து போனவனே!
கண்ணீரே வாழ்க்கையென்று கண்டுவந்து சொன்னவனே!
நலமா...? உனக்கேது அது...?
போன நாற்றாண்டையே (-) நீ
இப்போதுதானே வாழ்கிறாய்...

இதுவரை வோட்டுப்பெட்டியின் சாவி- உனது
வாழ்வின் வாசலை திறக்கவேயில்லை...

ஒவ்வொரு தேர்தலிலும் – நீ
முகூர்த்த சேலைக்குத்தான் மனு போட்டாய்...
அவர்களோ – உனக்கான
சவத்துணியை நெய்து தந்தார்கள்...!
நீ சிரம்ப்பட்டுச் செய்துமுடித்த
புல்லாங்குழலின் ஓட்டைகள்
உன் உதடுகளையே மென்று தின்றன!

நட்சத்திரங்களைக் கனவு கண்டுகொண்டே – நீ
மின்மினிகளிடம் சரண்டைந்தாய்...

வருகிறது இன்னொரு தேர்தல் – இனி
மந்திரிகள் உன் குடிசைக்குள் குனிந்து வரலாம்...
கண்ணீர் துடைக்க்க் கைகுட்டையைக்கூடத் தராதவர்கள்,
மூக்குத்தி சுமந்த லட்டு கொடுத்தார்கள்.

இந்தமுறை எந்த தூண்டிலோ?
அந்தத் தூண்டில்களில் மாட்டதே – முடிந்தால்
மண்புழுக்களை விடுவித்துவிடு!
உனது வோட்டு.. சட்டசபைக்கு இனி
மந்திரிகளையல்ல,
மனிதர்களை அனுப்பட்டும்..

வாங்கிய சாபங்களும்கூட இனி
வரங்களாகட்டும்!
-          ---- வாசன். சென்னை-26 

   நிஜகுணம்!

   நூறு சதவிகிதம் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்கிற சமயத்தில் ஒரு மனிதன் என்ன செய்கிறானோ....... அதுதான் அவனது நிஜ குணம்.

No comments:

Post a Comment