20 October 2011

மீண்டும் உன்னை சந்திக்காமலா போய்விடுவேன்?


உனக்கென்ன...! பெயர் மட்டும் சொல்லி விட்டு
முகவரி சொல்லாமல் போய்விட்டாய்.
ஆனால் மழை நின்ற பிறகும் மலர்கள் நடுங்குவதுபோல்
எனக்குள்... ஏன் இத்தனை அதிர்வுகள்?
உன்னோடு நேர்ந்த அனுபவத்துக்கு
என்னோடு என்ன அடையாளமிருக்கிறது?
என்ன ஆனது எனக்குள்
ஒரே நாள் மழையில் ஏரி நிறைவது மாதிரி
உன் ஒரே பார்வையில் என்
வெறுமை நிறைந்து விட்டதே!
என் ஜன்னல்களை பெண்கள் உரசிப்போனதுண்டு
மேகங்கள் மாதிரி – ஆனால்
உரசிப்போன வேகத்தில் உட்கார்ந்து
மழை பெய்தவள் நீதானடி!
உன் நினைவுகளை அங்குலம் அங்குலமாக
அசைபோட்டுக் கொண்டேயிருகிறேன்.
உன் கருத்துக்களை என்னால் ஏற்க முடியாது
ஆனால் உன் கண்களை என்னால் மறக்க முடியாது.
உன்னை மீண்டும் சந்திக்காமலா போய்விடுவேன்?
வானத்தில் எறியப்பட்ட கல்
விண்ணுக்கு வெளியே சென்று விழுந்துவிட முடியமா?
சந்திப்பேன் நிச்சயம் சந்திப்பேன்.

- வைரமுத்து.

1 comment:

  1. வருகைக்கு நன்றி நண்பரே! உங்கள் வலைத்தளத்திற்கும் வருகை தந்தேன். பின் தொடர்கிறேன்.

    ReplyDelete